இவரும் "டுபாக்கூர்" அமைச்சரா?... இவரையும் பிடிச்சு உள்ள போடுவீங்களா போலீஸ்கார்??!
மும்பை: வடிவேலு போல பீலா விட்டு வலம் வந்த டெல்லியின் முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர் போல மகாராஷ்டிராவில் ஒரு டுபாக்கூர் அமைச்சர் வலம் வருகிறார். அவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க போர்க்குரல் வெடித்துள்ளது.
பெயருக்குப் பின்னால் ஏபிசிடி என எழுத்துக்களைச் சேர்த்து பீலா விடுவது பலருக்கு வழக்கமாக உள்ளது. பத்தாவது கூட படித்திருக்க மாட்டார்கள்.. ஆனால் எம்.ஏ., எம்.பி.ஏ என்று எகிறிக் குதிப்பார்கள். இதை பிரபலங்களும் செய்யும்போது பெரும் சர்ச்சையாகி விடுகிறது.
டெல்லியில் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜிதேந்தர் சிங் டோமர் இப்படித்தான் போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கி பதவியிழந்து தற்போது கைதும் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் பட்னாவிஸ் அமைச்சரவையில் குடிநீர் விநியோகம் மற்றும் துப்புறவுத் துறை அமைச்சராக இருப்பவர் பாபன்ராவ் லோனிகர். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருப்பவர் இவர். பர்தூர் என்ற தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது தான் யஷ்வந்த் ராவ் சவான் ஓபன் பல்கலைக்கழகத்தில் பிஏ முதலாமாண்டு தேர்ச்சி பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2014 சட்டசபைத் தேர்தலின்போது தாக்க் செய்த வேட்பு மனுவில் தான் 5ம் வகுப்பு பாஸ் என்று போட்டிருந்தார். அதேசமயம் இவரது இணையதளத்தில் இவர் பிஏ படித்து முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து லோனிகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நான் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் என்பது உண்மையே. டோமர் மாதிரி நான் போலி சான்றிதழ் எல்லாம் வைத்திருக்கவில்லை.
கடந்த 1991ம் ஆண்டு நான் பிஏ வகுப்பில் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். ஆனால் 1999 வரை அதை முடிக்காமல் இருந்தேன். இருப்பினும் நான் படிப்பில் சேர்ந்திருந்த காரணத்தால் வேட்பு மனுக்களில் அதைக் குறிப்பிட்டு வந்தேன். ஆனால் தொடர்ந்து என்னால் படிக்க முடியாது என்பதை உணர்ந்ததால், 2014 வேட்பு மனுவில் எனது உண்மையான படிப்பான 5ம் வகுப்பு என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எனவே இதில் மோசடி எதுவும் இல்லை என்றார் லோனிகர்.
ஆனால் லோனிகர், மகாராஷ்டிராவின் டோமர், எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.