இந்தியாவில் விடிய, விடிய நடந்த ஐபோன் விற்பனை.. 1 லட்சம் போன்களின் திடீர் விற்பனைக்கு காரணம் என்ன?
கொல்கத்தா: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்த பிறகு, தங்க நகை விற்பனை விறுவிறுவென நடந்தது. அதேபோல ஐபோன் விற்பனையும் விடிய விடிய நடந்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக 4 லட்சம் ஐபோன்களை இந்திய சந்தையில் கடந்த அக்டோபரில் களமிறக்கியது ஆப்பிள். இதில் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஐபோன்கள் விற்று தீர்ந்துள்ளன.
விடிய விடிய நடந்த வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் டீலர்கள் கூட, ஐபோன் டீலர்களிடம் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்கு ஐபோன்களை வாங்கி குவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற இடங்களில் இந்த விற்பனை அபாரமாக இருந்துள்ளது.
இந்திய சந்தையில் சமீபத்திய வரவான ஐபோன் 7, ரூ.60,000 விலை கொண்டது. ஐபோன் 7 பிளஸ், ரூ.92,000 விலையாகும். இவை
இரண்டும் அதிக விலையுள்ளவை என்பதால் இவையே அதிகம் விற்பனையாகியுள்ளன.
சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 8ம் தேதி இரவும் அதையடுத்து மூன்று நாட்களிலும் விற்பனையான ஐபோன்கள் பலவற்றுக்கு முன்தேதியிட்ட பில்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மொபைல் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.
விற்பனை வேகத்தை பார்க்கும்போது, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை ஐபோன் வாங்க பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐபோன் விற்பனை உலகமெங்கும் மந்தமாக உள்ளது. ஆண்டிராய்டு போன்கள் வருகை, போலி ஐபோன்கள் வருகையால் நிலைமை இப்படியுள்ள நிலையில், திடீரென 1 லட்சம் போன்கள் விற்று தீர்ந்துள்ளது ஆச்சரியம் தருகிறது. கருப்பு பணத்தை எங்காவது சென்று கொட்டிவிட வேண்டும் என்று பலரும் முயற்சி செய்துள்ளது இவற்றின் மூலம் அம்பலமாகிறது.