மும்பை, குஜராத் என செல்லுமிடமெல்லாம் ‘வழக்குகளை’ வாங்கி வரும் ஆம் ஆத்மி...
மும்பை: கடந்த சில வாரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது தொண்டர்கள் மீது சென்ற இடங்களிலெல்லாம் மோதல், பிரச்சினை, சேதம் என புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து மற்றக் கட்சித் தலைவர்களைப் போல் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், செல்லுமிடங்களிலெல்லாம் அவரது செய்கையாலும், உரையாலும் சர்ச்சைகள் வெடிக்கின்றன. இதனால் அவர் மீதும், அவரது கட்சி தொண்டர்கள் மீதும் மும்பை மற்றும் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது சொத்தை சேதப்படுத்தியது, டோல்கேட்டில் வரி செலுத்தாதது, அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் இடையூறு விளைவித்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கெஜ்ரிவால் மீதும் அவரது கட்சியினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்...
கடந்த வாரத்தில் குஜராத் வளர்ச்சியை நேரில் காண அங்கு சென்றார் கெஜ்ரிவால். தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக வழியிலேயே அவர் தடுத்து நிறுத்தப் பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கட்சித் தொண்டர்கள் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

ஆம் ஆத்மி -பாஜக மோதல்...
இதனால் ஆம் ஆத்மி-பாஜக தொண்டர்கள் மத்தியில் மோதல் உண்டானது. 5 பேர் காயமடைந்தனர். பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கெஜ்ரிவால் அடம்...
குஜராத் முதல்வரும்,பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடியை பலவகைகளிலும் தாக்கி பேசி வந்த கெஜ்ரிவால், தனது குஜராத் பயணத்தில் திடீரென மோடியைச் சந்தித்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தார்.

கைது...
முன்அறிவிப்பின்றி மோடியின் வீட்டிற்கு செல்ல முயன்ற கெஜ்ரிவாலை சந்திக்க மோடி அனுமதி அளிக்காததால், அவரது வீட்டின் முன் அமர்ந்து கெஜ்ரிவால் அவரது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பாதுகாப்பு கருதி செய்யப்பட்ட கெஜ்ரிவால், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அபராதம்...
அதனைத் தொடர்ந்து மும்பை சென்றார் கெஜ்ரிவால். அங்கு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக அவர் பயணம் செய்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்தது போலீஸ்.

கூட்ட நெரிசல்... தள்ளுமுள்ளு
பின்னர் கெஜ்ரிவால் ரயில்வே நிலையத்திற்கு வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்தது. போலீசாரால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போனதால் பொது மக்களுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மும்பையில் வழக்குப்பதிவு...
இதில் ரயில் நிலையத்தில் இருந்த மெட்டல் டிடைக்ட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு சோதனை கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கெஜ்ரிவால் மீதும், அவரது கட்சியினர் மீதும் மும்பை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

டோல்கேட்....
மும்பை போலீசை தொடர்ந்து, கெஜ்ரிவாலின் குஜராத் பயணத்தின் போது மாநில எல்லைக்குள் நுழைவதற்கு டோல்கேட்டில் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் சென்றதால் சமக்யாலி பகுதி டோல்கேட் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆவேசப்பட்ட கெஜ்ரிவால்...
ஆனால், ஆம் ஆத்மியால் குஜராத் மற்றும் மும்பையில் ஏற்பட்ட பதற்றத்திற்கு மீடியாக்களேக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது அக்கட்சி. நாக்பூரில் நேற்று நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெஜ்ரிவால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொய்யான தகவல்களை வெளியிடும் பத்திரிக்கைகளை சிறைக்குள் தள்ளுவோம் என ஆவேசமாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறான தகவல்...
ஆனால் இம்முறையும் தன்னைப் பற்றி தவறான தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் தான் அவ்வாறு எதுவும் கூறவில்லை எனவும் கெஜ்ரிவால் மறுத்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றனது.

பழி வாங்கும் நடவடிக்கை...
இதற்கிடையே, அக்கட்சியின் மாயன்க் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாங்கள் மீடியாக்களை அழைக்கவில்லை; கெஜ்ரிவால் வரும் சமயத்தில் அவர்கள் தான் ஆட்டோ மீது தொற்றிக் கொண்டு வந்தனர்; நாங்கள் சட்டத்தை மீறி ஏதும் செய்யவில்லை; எங்கள் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் கொண்டுள்ள பயம் மற்றும் பழி வாங்கும் நடவடிக்கையாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' எனப் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications