அதிநவீன அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!!
புவனேஸ்வர்: சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அதிநவீன ஏவுகணையாக அக்னி 5 வடிவமைக்கப்பட்டது. 50 டன் எடை கொண்ட அக்னி 5 ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக கேனிஸ்டர் எனும் எளிதில் ஏவக்கூடிய சாதனம் மூலம் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
எல்லையில் இருந்து இந்த ஏவுகணையை ஏவினால் அது சீனாவின் மேற்கு பகுதியை தாக்கும் அளவுக்கு திறன் வாய்ந்தது. அக்னி 5 ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும். ராணுவத்தில் அக்னி 1, அக்னி 2, அக்னி 3 ஆகிய ஏவுகணைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி 4 ஏவுகணை 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை வாய்ந்தது. அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகளை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.