அக்னிபாத் திட்டம்.. பிரதமர் தொகுதியில் வெடித்த போராட்டம்.. ரயில் நிலையம் சூறையாடல்..!
வாரணாசி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியிலேயே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரயில் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவுகளை குறைக்க அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பின் 25 சதவீதம் பேர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மீதமிருப்பவர்கள் ஒய்வூதியம் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இந்தத் திட்டத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்பபெறக் கோரி பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 10 மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
இதனிடையே அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஹரியானா மாநிலம் குருகிராமில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான பதாகைகளுடன் முகத்தை துணியால் மூடி வாரணாசியின் பாலியா ரயில் நிலையம் வந்த ஏராளமான போராட்டக்காரர்கள், ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, ரயில் நிலையத்தை சூறையாடினார். இதன்பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பிரதமரின் தொகுதியிலேயே போராட்டம் வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில் நிலைய தாக்குதல் சம்பவம் காரணமாக வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications