ஜெ. ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு: கோர்ட் வளாகத்தில் அதிமுக ஆதரவு வக்கீல்கள் போராட்டம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதால் கர்நாடக ஹைகோர்ட் எதிரே நின்றபடி அதிமுக தொண்டர்களும், அதிமுக அனுதாபி வக்கீல்கள் சிலரும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றதையடுத்து கர்நாடக ஹைகோர்ட்டுக்கு அதிமுக தொண்டர்களும், தமிழகத்தில் இருந்து அதிமுக அபிமானமுள்ள வக்கீல்களும் கோர்ட்டில் குவிந்தனர்.

வழக்கில் ஆஜராகும் அதிமுக வக்கீல்களை தவிர்த்து பிற வக்கீல்கள் ஹைகோர்ட் வெளியே நின்றிருந்தனர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ரத்தினகலா அறிவித்த தகவல் வெளியே நின்றவர்களுக்கு தெரியவந்ததும், கோர்ட் நுழைவாயிலில் தொண்டர்கள், அழுது, புரண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அதே நேரம் வக்கீல்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று போராட்டக்காரர்களை கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், நீதிபதி ரத்தினகலா, விசாரணையை கேட்க கூட தயாராக இல்லை. எனவே கர்நாடக தலைமை நீதிபதி, கர்நாடக அரசு, பிரதமர், குடியரசு தலைவர் போன்றோர் தலையிட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு வெளியே சுமார் 150க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications