ஹோட்டல் வாடகை கட்டுப்படியாகலை.. பெங்களூரில் வாடகைக்கு வீடு பார்க்கும் அதிமுகவினர்!
பெங்களூர்: சிறையிலுள்ள ஜெயலலிதாவை அவ்வப்போது பார்க்க வரும் கட்சி நிர்வாகிகள், பெங்களூரிலேயே வீடு வாடகைக்கு தேடி வரும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த மாதம் 27ம்தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் ஜெயலலிதா என்பதால், அவர் சிறையில் இருக்கும்போது அவரை சந்தித்து, அவரின் அன்பை பெற கட்சி நிர்வாகிகள் போட்டா போட்டி போட்டு வருகிறார்கள்.
பன்னீர்செல்வம் டீம்
இதற்கு அமைச்சர்கள், ஏன் தற்போதைய முதல்வர் கூட விதிவிலக்கு கிடையாது. முதல்வராக பதவியேற்றதும், பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் டீம் பெங்களூரை நோக்கி பயணப்பட்டதும், ஜெயலலிதா அவர்களை சந்திக்க மறுத்து திருப்பியனுப்பியதும் தெரிந்த விஷயம்தான். ஆயினும், ஜெயலலிதாவே சந்திக்கமாட்டார் என்று தெரிந்தாலும்கூட பெங்களூர் வரும் அதிமுகவினர் எண்ணிக்கை சீராக இருந்துகொண்டே உள்ளது.
அம்மா கவனத்தில் இருப்போமே..
சிறைக்கு வந்து ஜெயலலிதாவை பார்க்க விண்ணப்பம் கொடுக்கும் நிர்வாகிகளின் பெயர் பட்டியலை ஜெயலலிதா படித்து பார்ப்பதாகவும், அதன்பிறகே யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று அவர் கூறிவிடுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், அம்மா கண்களில் நமது பெயர் படட்டுமே என்ற ஆசையிலும் அவ்வப்போது பல நிர்வாகிகள் சிறையையே சுற்றி வருகின்றனர். மேலும், சிறைக்கு வரும் நிர்வாகிகளின் பெயர்கள் மீடியாக்களில் வெளிவருவதாலும், அதை ஜெயலலிதா பார்ப்பதாலும், நிர்வாகிகள் உற்சாகத்துடன் சிறைக்கு வருவதாகவும் தெரிகிறது.
ஹோட்டல் வாடகை அதிகம்
பெங்களூர் வரும் கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும், முன்னாள் எம்.எல்.ஏக்களும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்,ஏக்களும் ஹோட்டல்களில் தங்கி வருகின்றனர். ஓரளவுக்கு டீசன்டான ஹோட்டல் என்றாலும், நாள் ஒன்றுக்கு ரூ.2,500-க்கு மேல் வாடகைக்காக செலவிட வேண்டியுள்ளதாம்.
பக்கத்தில் ஹோட்டல்கள் இல்லை
பரப்பன அக்ரஹாரா சிறை அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் பெரிய அளவிலான தங்கும் ஹோட்டல்கள் இல்லை. எனவே நான்கைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள, எலக்ட்ரானிக்சிட்டி, பொம்மனஹள்ளி, மடிவாளா போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில்தான் ரூம் போட வேண்டிய கட்டாயம் அதிமுகவினருக்கு உள்ளது. அங்கிருந்து சிறைக்கு வருவதும் போவதும் டிராபிக் நெரிசலில் சிரமமாக உள்ளதாகவும் அவர்கள் புலம்புகிறார்கள்.
வீடு வேண்டும்.. வீடு
இந்த பிரச்சினைக்கு தீர்வாக சிறை வளாகம் அமைந்துள்ள பகுதியில் வாடைக்கு வீடு பார்த்து குடியேற அதிமுகவினர் பலரும் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, ஸ்ரீசாய் லேஅவுட், நாகநாதபுரா, பசபுரா, பேகூர், சிங்கச்சந்திரா போன்ற பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடப்படுகிறது. வீட்டு புரோக்கர்கள் சிலர் இந்த தகவலை உறுதி செய்தனர்.
டபுள் வாடகை தர தயார்
அந்த பகுதிகளில் சிங்கிள் பெட்ரூம் வீடுகள் ரூ.5 ஆயிரம் என்ற வாடகையில் கிடைக்கின்றன. இருப்பினும் கட்சியினர் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வீடு தர யோசித்து வருகின்றனர். ஆனால் ரூ.10 ஆயிரம் வரை வாடகை தர தயாராக இருப்பதாக புரோக்கர்கள் ஆசை வார்த்தை கூறிவருகின்றனர். கொங்கு மண்டலத்தின் ஒரு தொகுதியில் அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முக்கிய புள்ளிக்கு வாடகைக்கு வீடு கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.