நாட்டின் 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்!
டெல்லி: நாட்டின் 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐ.பி. முன்னாள் இயக்குநர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார் .
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உளவுப் பிரிவு எனப்படும் ஐ.பி.யின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் அஜித் தோவல். ராணுவம் தரும் கௌரவமான, கீர்த்தி சக்ரா விருதைப் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் தோவல்.
தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தும் வடகிழக்கு இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் தோவல் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவத்தால் இந்தியாவிற்கு இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களைப் பற்றிய ஆழ்ந்த பார்வையை தோவல் தருவார் எனத் தெரிகிறது.
பிரஜேஸ் மிஸ்ரா
தோவல் தற்போது நாட்டின் 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் முதலாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா. 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார்.
ஜே.என்.தீட்சித்
அவரைத் தொடர்ந்து மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் ஜே.என். தீட்சித் 2004ஆம் ஆண்டு நாட்டின் 2வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுகாலம் பதவி வகித்தார்.
எம்.கே. நாராயணன்
ஜே.என். தீட்சிட்தைத் தொடர்ந்து முன்னாள் ஐ.பி. இயக்குநரான எம்.கே. நாராயணன் நாட்டின் 3வது தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார். அவர் 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். பின்னர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
சிவசங்கர் மேனன்
நாட்டின் 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் கடந்த 4 ஆண்டுகாலம் பணியாற்றினார். மத்தியில் புதிய அரசு பதவியேற்ற நிலையில் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
அஜித் தோவல்
தற்போது 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.1968-ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த அவர் உளவுப் பிரிவில் உள்ள சிறந்த அதிகாரிகளில் ஒருவர். 1999-ஆம் ஆண்டு நடந்த கந்தகார் விமானக் கடத்தலில், இந்தியாவுக்காக கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.