குடும்ப சண்டையை மூடி மறைத்த அகிலேஷ், சிவபால்… வீதியில் இழுத்துவிட்ட ஆதரவாளர்கள்
உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷிக்கும் அவரது சித்தப்பா சிவபாலுக்கும் இருந்த குடும்பச் சண்டையை மறைத்து தேர்தல் பிரச்சார பயணத்தை ஏற்பாடு செய்தால், அவர்களின் ஆதரவாளர்கள் வீதியில் சண்டை போட்டு பயணத்தையே
லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷிக்கும் அவரது சித்தப்பா சிவபாலுக்கும் இடையே பெரிய தகராறு மூண்டது. அதனை ஒரு வழியாக மூடி மறைத்து, இன்று தேர்தல் பிரச்சார பயணத்திற்கு ஏற்பாடு செய்தால் அங்கு வந்த அகிலேஷ் மற்றும் சிவபால் ஆதரவாளர்கள் நாற்காலிகளை வீசி எறிந்து சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி. மாநிலத்தில் முதல்வராக உள்ள அகிலேஷ் யாதவிற்கும் அவரது சித்தப்பா சிவபாலுவிற்கும் கடும் மோதல் வெடித்ததையடுத்து, கட்சி இரண்டாக பிளந்துவிடும் என்ற நிலை உருவானது. தேர்தலுக்கு முன்பாக கட்சியில் ஏற்படும் பிளவை முலாயம் சிங் விரும்ப வில்லை. கட்சியின் பிளவைத் தவிர்க்க முதலாயம் சிங் கடும் முயற்சி செய்து மகனையும் தம்பியையும் ஒட்ட வைத்தார்.
இந்நிலையில், இன்று அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக மேடை அமைத்து விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல எந்த பிரச்சனையும் இல்லாதது போன்றே உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், முதலாயம் சிங் யாதவ் மற்றும் சிவபாலு ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்தனர். பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் கொடியசைத்து சிவபால் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
மேலும், அகிலேஷ் யாதவின் இந்த தேர்தல் பிரச்சார பயணம் வெற்றி அடைய பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், தொண்டர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் பணி ஆற்றி சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் சிவபால் மேடையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவும் மேடையில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அகிலேஷ் ஆதரவாளர்களுக்கும் சிவபாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி நாற்காலிகளை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசித் தாக்கிக் கொண்டனர். கட்சிக் கொடி கம்பங்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.
கட்சியின் தலைவர்களின் முன்னிலையிலேயே தொண்டர்கள் இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.