சஞ்சய், இந்திரா, ராஜீவ்வுக்கு அல்லா தண்டனை வழங்கினார்: மீண்டும் சர்ச்சை கிளப்பிய ஆஸம்கான்
டெல்லி: தாங்கள் செய்த தவறுகளுக்காகவே இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அல்லா தண்டனை வழங்கினார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அசாம் கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிஜ்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாம் கான், கூறியதாவது:
"எமர்ஜென்சி காலக்கட்டத்தின்போது சஞ்சய் காந்தி கொண்டுவந்த 'கட்டாய மலட்டுத்தன்மை' திட்டத்துக்காகவும், பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜீவ் காந்தி உத்தரவிட்டதற்காவும் இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார்
அதேப்போன்று இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் புல்டோசரை அனுப்பினார். அதன் விளைவு என்னவானது? ஒட்டுமொத்த குடும்பமே அழிந்துபோனது" என்றார்.
சஞ்சய் காந்தி ஹெலிகாப்டர் விபத்தில் 1980 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதேபோல் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு, மே 21 ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.
இவர்களது இருவரது தாயாரான முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி கருத்து தெரிவித்த அவர், மனைவியுடன் இருக்க முடியாத ஒருநபரால் நாட்டுக்காக எப்படி சிறந்த பிரதமராக உழைக்க முடியும் என்றும், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் பிரிவது சிறுபான்மையினர் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.