சித்துவிற்கு தலைவர் பதவியா? கொதிப்பில் மூத்த உறுப்பினர்கள்.. சோனியாவை சந்திக்கும் அமரீந்தர் டீம்!?
போபால்: பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை சித்துவிற்கு கொடுக்க கூடாது என்று முதல்வர் அமரீந்தர் சிங் தரப்பு போர்க்கொடி தூக்கி உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் எம்பிக்கள் குழு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.
பஞ்சாப்பில் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர் மீட்டிங்கில் கலந்து கொண்டு டெல்லி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இவர்களுக்கு இடையில் சமாதானம் செய்ய முயன்ற காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி தூக்கி உள்ளார். அமரீந்தர் சிங் ஆட்சிக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நானும் ஜெயலலிதாவும் முக்காடு போட்டுகிட்டு.. திருவான்மியூர் சாலையில் நடந்தே செல்வோம்.. சசிகலா தகவல்
பூசல்
இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் முதல்வர் பதவி தனக்கு வேண்டும் இல்லையென்றால் கட்சியில் தலைவர் பதவி வேண்டும் என்பதில் சித்து உறுதியாக இருக்கிறார். இதற்காக சோனியா காந்தி உட்பட காங்கிரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசி வந்த சித்து விரைவில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா
சித்துவை சமாதானம் செய்யும் வகையில் அவருக்கு தலைவர் பதவியை கொடுத்துவிட்டு, அமரீந்தர் சிங்கை அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் முடிவில் சோனியா இருக்கிறார். ஆனால் சித்து தலைவரானால் பஞ்சாப் காங்கிரஸ் அவரின் கைக்கு சென்றுவிடும், இது எதிர்காலத்தில் தன் பதவிக்கு ஆபத்தாக வரும், கட்சியில் தனது பவர் போய்விடும் என்று அமரீந்தர் சிங் நினைகிறார்.
முடியாது
இதனால் அமரீந்தர் சிங், சித்துவிற்கு எதிராக சோனியாவிற்கே கடிதம் எழுதி உள்ளார். சித்துவை கட்சி தலைவராக நியமித்தால் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இருக்காது என்று அமரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஒரு பக்கம் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேருடன் அமரீந்தர் சிங் ஆலோசனையும் நடத்தி உள்ளார்.
சந்திப்பு
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சித்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் தனியாக ஆலோசனை நடத்தினார். மேலும், இவர்களுடன் விருந்து சாப்பிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு தனது பவரை வெளிப்படுத்தி உள்ளார் சித்து. ஒரு பக்கம் சித்து இப்படி முரண்டு பிடித்து வரும் நிலையில் அமரீந்தர் சிங்கோ, நான் போராளி கடைசி வரை போராடுவேன் என்று வெளிப்படையாக சித்துவிற்கு சவால் விடுத்துள்ளார்.
சவால்
சித்துவை எதிர்க்கும் வகையில் அமரீந்தர் சிங் இன்று பஞ்சாப் காங்கிரஸின் இரண்டு அவை எம்பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த மீட்டிற்கு பின் காங்கிரஸ் பஞ்சாப் எம்பி பிரதாப் சிங் பாஜ்வா அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக சோனியாவிடம் பேச இருப்பதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் சோனியாவை பாஜ்வா சந்திக்க உள்ளார்.
சித்து நியமனம்
சித்து நியமனம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி இவர்கள் இன்று சோனியாவை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். ஒரு பக்கம் சித்து அடுத்தடுத்து மீட்டிங் நடத்தி தனது பாவரை காட்டி வரும் நிலையில், பல ஆண்டு அனுபவம் கொண்ட அமரீந்தர் சிங்கும் கொஞ்சம் விட்டுக்கொடுக்காமல் நேரடியாக டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளார். அமரீந்தர் சிங் vs சித்து மோதல் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.