மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த சான்ஸ் உள்ளதா? ஜெயந்தா புத்தகத்தில் இருப்பது என்ன?
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியை 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் பணியில் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இது சாத்தியமா, இல்லையா என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஜெயந்தா கோசல் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக உள்ளார். இவருக்கு பக்கபலமாக மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளார்.
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை அபிஷேக் பானர்ஜி தான் மேற்கொண்டார். கட்சியில் மம்தாவுக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்த நபராக இவர் உருமாறியுள்ளார்.

விரிசல்
இந்நிலையில் தான் மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன், மம்தாவுக்கு இடையே சில விஷயங்களில் விரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகார பங்கீடு. கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி எனும் பிரசாரத்தை அபிஷேக் பானர்ஜி முன்னெடுத்தார். இதில் பல பதவிகள் வைத்துள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது மம்தா பானர்ஜிக்கு பிடிக்கவில்லை. இதுவும் விரிசலுக்கான காரணமாகும். இதுதொடர்பாக நேற்று மம்தா பானர்ஜி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

புத்தகம்
இந்நிலையில் தான் பிரபல பத்திரிகையாளர் ஜெயந்தா கோசல், மம்தா பானர்ஜி குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். Mamtha Beyond 2021 எனும் தலைப்பிலான புத்தகத்தில் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பிரதமர் வேட்பாளர்
அதில் அபிஷேக் பானர்ஜி மிகவும் கூர்மையானவர். ஊடகங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார். அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இமேஜை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். தேசிய கட்சியாக்க முயற்சிக்கிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக்கும் நடவடிக்கையில் உள்ளார்.

அதிக தூரம்
ஆனால் அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்துக்கும், டெல்லிக்கும் அதிக தொலைவு உள்ளது. கொல்கத்தாவில் இருந்து டெல்லி 1564 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ளது. இங்கிருந்து அங்கு செல்வது சாதாரணமான விஷயமாக இருக்காது. பாஜகவில் அங்கம் வகிக்காத, நம்பிக்கையான எதிர்க்கட்சிகளுடன் சாமர்த்தியமாக பேசி ஒரே குடையின் கீழ் கூட்டணியாக கொண்டு வர வேண்டும். அதன்பின்னும் பிரச்னையின்றி பார்த்து கொள்வது அவசியமாக உள்ளது.

கேள்வி எழுகிறது
இந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ், அபிஷேக் பானர்ஜியுடன் இணைந்திருந்தபோது இந்த கூட்டணி தொடர்பான முயற்சி மதிப்பானதாக இருந்திருக்கும். ஆனால், தற்போது கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் அபிஷேக் பானர்ஜியால் பல கட்சிகளை ஒருங்கிணைக்க முடியுமா என்பதில் கேள்வி எழுகிறது. மேலும் அபிஷேக் பானர்ஜி நேரிடையாக மம்தா போன்று முழுஅரசியலில் இறங்கவில்லை.

மம்தா வரலாறு
ஆனால் இளைஞர் காங்கிரஸ் தலைவியாக இருந்தபோது மம்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஜூலை 21, 1991ல் துப்பாக்கியால் சுடப்பட்டார். அப்போது அபிஷேக்கிற்கு வயது நான்கு. முன்னதாக, 1990ல் தெற்கு கொல்கத்தாவில் பேரணிக்கு தலைமை தாங்கியபோது, மம்தா தலையில் காயம் ஏற்பட்டது. 1993ல் மம்தா மீது நடந்த மற்றொரு தாக்குதல் இன்று வரை 'ஷாஹித் திவாஸ்' என்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு மம்தாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கோபமடைந்தனர். ஆனால் அவர்களில் யாரையும் மம்தா அரசியலில் சேர்த்து கொள்ளவில்லை. இதில் விதிவிலக்கானவர் அபிஷேக்.'' என குறிப்பிட்டுள்ளார்.

உணர்வுபூர்வமானவர்
மேலும், ‛‛2021 மேற்குவங்க சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மம்தாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களை கவர்ந்தவர் அபிஷேக். அவரது பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் உணர்வுபூர்வமாக இருந்தன. இதன்மூலம் அவர் நவீன கால அரசியலை புரிந்துகொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் சிறப்பாக பிரசாரம் முன்னெடுக்கிறார்.

காலத்தின் பதில்
2011 முதல் அபிஷேக் அரசியலை வேகமாக கற்று கொள்பவராக இருக்கிறார். இருப்பினும் மாநில அளவில் உள்ள கட்சியை தேசிய அளவுக்கு உயர்த்தி, அத்தை மம்தாவை 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி சாதிக்க முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications