முதலில் லவ் ஜிகாத் சட்டம்... இப்போது நில ஜிகாத் சட்டம்... அசாம் தேர்தலுக்கு பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச்
திஸ்பூர்: அசாம் சட்டசபை தேர்தலில் லவ் ஜிகாத் தடை சட்டத்தைப் போலவே நில ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அமித்ஷாவும் தேர்தல் பிரசாரங்களில் இந்தச் சட்டத்தையே வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார்.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 39 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இறுதி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி 40 தொகுதிகளில் நடைபெறுகிறது.
கடும் போட்டி
அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆளும்கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் களமிறங்குகிறது. மத்திய அரசின் சிஏஏ மற்றும் என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக அசாம் மாநிலத்தில் தீவிர போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமித் ஷா பேச்சு
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "அசாம் மாநிலத்தில் ஊடுருவியுள்ளவர்கள் முறைகேடாக நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் நில ஜிகாத்தை செய்கிறார்கள். பாஜக மீண்டும் அசாம் மாநிலத்தில் ஆட்சியை அமைத்ததும் நில ஜிகாத்தை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்" என்று அவர் பேசினார். பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் லவ் ஜிகாத் சட்டத்துடன் நில ஜிகாத் சட்டம் குறித்த வாக்குறுதியும் இடம் பெற்றுள்ளது.
லவ் ஜிகாத் சட்டம்
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தில் முதலில் லவ் ஜிகாத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அப்பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இதைத் தடுக்கவே வல் ஜிகாத் சட்டம் கொண்டுவரப்படுவதாக யோகி அரசு கூறியது. இதேபோன்ற சட்டம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நில ஜிகாத் சட்டம்
சரி, இப்போது பாஜக வாக்குறுதியாக அளித்துள்ள நில ஜிகாத் சட்டமும் குறித்துப் பார்ப்போம். அதாவது அசாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலங்களை மிரட்டி பிடுங்குவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் அசாம் மாநில மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்கவே நில ஜிகாத் சட்டம் கொண்டு வரவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் இந்த வாக்குறுதியைக் கடுமையாகச் சாடியுள்ளன. பாஜக பிரித்து ஆளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிப்பதாகவும், லவ் ஜிகாத் சட்டத்தில் எப்படி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்படுகிறார்களோ, அதேபோல நில ஜிகாத் சட்டமும் இஸ்லாமியர்கள் நிலம் வாங்குவதைத் தடுக்கவே பாஜக கொண்டு வர முயல்வதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.