திராவிட எதிர்ப்பு அரசியலை தொங்கிக் கொண்டு தமிழக பாஜக ஏதோ ஒரு உலகில் இருக்கிறது- அமித் ஷா காட்டம்
தமிழக பாஜகவின் திராவிட எதிர்ப்பு அரசியலை அமித்ஷா ரசிக்கவில்லையாம்.
பெங்களூரு: திராவிட எதிர்ப்பு அரசியலை விடாமல் பிடித்துக் கொண்டு தமிழக பாஜக ஏதோ ஒரு உலகில் இருக்கிறது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சாடியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. தமிழ்நாட்டில் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதே அங்குள்ள நிர்வாகிகளுக்குத் தெரியவில்லை' எனக் கட்சி நிர்வாகிகளிடம் அவர் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் முப்பது தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி, எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிரசாரப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். தென்மாநிலத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், கர்நாடகாவிலேயே தங்கியிருக்கிறார் அமித் ஷா.
இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் செயல்பாடுகளைப் பற்றி, கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். அப்போது, ' அகில இந்திய பா.ஜ.கவின் நிலைப்பாடு ஒன்றாகவும் தமிழக பா.ஜ.கவின் நிலைப்பாடு வேறு ஒன்றாகவும் இருக்கிறது. அந்தந்த சூழலுக்கு ஏற்ப எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதே அங்குள்ள சிலருக்குத் தெரியவில்லை.
இன்னமும் பயன்தராத விஷயங்களைப் பேசிக் கொண்டு வருகின்றனர். ம.பி, உ.பி, பீகாரில் நாம் முன்னெடுத்த அரசியலைப் போல, தமிழகத்திலும் முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஜாட், யாதவர்களுக்கு எதிராக நாம் முன்வைத்த அரசியல்தான், அங்கு வெற்றியைத் தேடித் தந்தது. தமிழ்நாட்டிலும் சசிகலா சமுதாயத்து ஆட்களுக்கே அதிகப் பதவிகள் அளிக்கப்பட்டன. இதன்மூலம், சமூகநீதியையே குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் எனப் பிரசாரம் செய்திருக்க வேண்டும். உபேந்திர குசாவா மாதிரியோ, அனுப்பிரியா பட்டேல் போலவும் அங்குள்ளவர்கள் செயல்பட்டிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். இதையெல்லாம் செய்யாமல், வெறுமனே திராவிடத்துக்கு எதிரான அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் புறக்கணிக்கப்படும் சமூகங்களை முன்னிறுத்தி, வெற்றியை பெறுவது அமித்ஷாவின் பாணியாம். தமிழ்நாட்டில் சசிகலா குடும்பத்தை எதிர்த்ததே, இப்படியொரு பின்னணியில்தானாம். இதைப் புரிந்து கொள்ள தமிழிசையும் எச்.ராஜாவும் தவறிவிட்டதைத்தான் சுட்டிக் காட்டினாராம் அமித்ஷா. தமிழக வருகையின் போது பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் பலரையும் அமித்ஷா சந்திக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.