என்னது.., வருங்கால ஜனாதிபதி அமிதாப்பச்சனா?
மும்பை: கலைத்துறையிலிருந்து ஒருவரை குடியரசு தலைவராக நியமிக்க வேண்டுமானால் அதற்கு அமிதாப் பச்சன் பொருத்தமானவர் என்று பாஜக எம்.பியும், நடிகருமான சத்ருகன் சின்ஹா சொன்னாலும் சொன்னார் பாலிவுட்டில் அனல் பறக்கிறது.
லிங்கா பட புகழ் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தையான சத்ருகன், அமிதாப் பச்சனுக்கு நீண்ட கால நண்பராகும். மத்தியில் அமைச்சராகவும் இருந்தவர்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அமிதாப்பச்சனை குடியரசு தலைவராக நியமிக்கலாம் என இதழ் ஒன்றுக்கு சத்ருகன் சின்ஹா பேட்டியளித்திருந்தார்.
கலைத்துறை
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த அமிதாப் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பதவியான குடியரசு தலைவர் பதவிக்கு அமிதாப் பச்சனை நியமித்தால், அது கலைத்துறைக்கு செய்யும் பெரிய கைமாறாக இருக்கும் என சத்ருகன் சின்ஹா கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஜோக் அடிப்பார்
இதற்கு பதிலளித்த அமிதாப்பச்சன், சத்ருகன் சின்ஹா எனது நல்ல நண்பர். நாங்கள் இருவரும் நகைச்சுவையை பரிமாறிக்கொள்வது வழக்கம். இதுவும் ஒரு ஜோக்காக சொல்லப்பட்ட வார்த்தை.
அர்த்தமற்ற பேச்சு
சத்ருகன் சின்ஹா கூறிய இந்த வார்த்தைக்கு நம்பகத்தன்மை கொடுத்துவிடாதீர்கள். அவ்வப்போது இப்படித்தான் எதையாவது சத்ருகன் சின்ஹா சொல்லிக்கொண்டிருப்பார். அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார்.
தகுதி இல்லைங்க
உங்களை பெரிய பதவியில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களே.. என்ற கேள்விக்கு பதிலளித்த அமிதாப், இல்லை. அப்படியெல்லாம் இல்லை. நான் அதற்கு தகுதியான நபர் கிடையாது. என்னால் அது முடியவும் செய்யாது, அதை செய்ய முயலப்போவதும் இல்லை. எனவே இது பற்றிய கேள்விகளை நிறுத்திக்கொள்ளுங்கள். இது அர்த்தமற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.