அட கொடுமையே.. முகத்தில் இருந்து நழுவி விழுந்த மாஸ்க்.. ஆட்டோ டிரைவரை இரக்கமின்றி தாக்கிய போலீசார்!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் முகத்தில் இருந்து மாஸ்க் நழுவி கீழே விழுந்ததால் ஆட்டோ டிரைவர் ஒருவரை 2 காவலர்கள் ஈவுஇரக்கமின்றி கொடூரமாக தாக்கினார்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக வீசி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது.
சிக்கிம் - நேபாளம் எல்லையில் 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் - குலுங்கிய வீடுகளால் மக்கள் பீதி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,15,736 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இதுவரை இல்லாத அளவாக உச்ச பாதிப்பை எட்டியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் பதிவாகி உள்ளன. அதிலும் மகாராஷ்டிராவில் மட்டும் தினமும் 55,000-க்கு மேல் தொற்று பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்த்தில் தினமும் 3,000-க்கு மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அபராதம் விதிக்கப்படுகிறது
சில இடங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாஸ்க் அணியாதவர்கள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் சரியாக அணியாத ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை பார்க்க சென்ற டிரைவர்
மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கிருஷ்ணா கேயர்(வயது 35). இவரது தந்தை மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தையை பார்ப்பதற்காக கிருஷ்ணா கேயர் மாஸ்க் அணிந்தபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது முகத்தில் இருந்து மாஸ்க் நழுவி கீழே விழுந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்கள் இதனை பார்த்தனர்.
கொடூரமாக தாக்கினார்கள்
தொடர்ந்து அந்த காவலர்கள் கிருஷ்ணா கேயரை வரவழைத்து ''ஏன் மாஸ்க் சரியாக போடவில்லை'' என்று காவல் நிலையத்துக்கு வருமாறு கூறினார்கள். அதற்கு கிருஷ்ணா கேயர் மறுக்கவே, அவரை லத்தியால் கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கினார்கள். தான் மருத்துவமனைக்கு செல்வதாகவும், மாஸ்க் அணிந்து சென்றதாகவும் கிருஷ்ணா கேயர் விளக்கம் அளித்த போதிலும், அதற்கு செவிசாய்க்காத காவலர்கள் அவரை தொடர்ந்து கொடூரமாக தாக்கினார்கள். அங்கு நின்று கொண்டிருந்த சிலர் இதனை தடுக்காமல் போலீசார் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
2 காவலர்கள் பணியிடை நீக்கம்
காவலர்களின் மனித நேயமற்ற இந்த கொடூர செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பினரும் காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிருஷ்ணா கேயரை தாக்கிய காவலர்கள் கமல் பிரஜாபத் மற்றும் தர்மேந்திர ஜாட் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.