மத்திய அரசில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம்-ராஜ்நாத்! அப்ப அன்புமணி அமைச்சர்!!!
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே எம்.பி.யான அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைத் தாண்டி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும். இந்த நாட்டை பாஜக வழிநடத்தி செல்ல யார் ஆதரவு அளித்தாலும் அதையும் ஏற்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளில் தமிழகத்தில் வென்ற ஒரே கட்சியான பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
என்.ஆர். காங்கிரஸ்?
அதே நேரத்தில் புதுவையில் பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றதாக சொல்லப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்.ஆர். காங்கிரஸும் வேட்பாளரையும் நிறுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தியது.
தற்போது பாமகவை என்.ஆர். காங்கிரஸ் வீழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அமைச்சரவையில் என்.ஆர்.எஸ்.காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்ற புதிய குழப்பமும் உருவாகியுள்ளது.