தேர்தலுக்கு முன்னாடி வடை, சமோசா – தேர்தலுக்கு அப்புறம் ஒன்லி ”அல்வா”
ஹைதராபாத்: ஆந்திராவில் மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கிறது.
தெலங்கானா பகுதியில் வரும் 30 ஆம் தேதியும், சீமாந்திராவில் மே 7 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் அமரக் கூடிய வகையில் நடக்கும் தேர்தல் என்பதால் எல்லா முக்கிய கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
அனல் பறக்கும் பிரச்சாரம்:
வீதிக்கு வீதி பிரசாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்கள் நடிகர்களை மிஞ்சி விட்டார்கள். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா, கிரிக்கெட் போட்டிகள் என்று பொதுமக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியையும் விட்டு வைப்பதில்லை.
கூப்டாட்டியும் வருவோம்ல:
சலவை தொழிலாளர்கள், போண்டா, வடை, சமோசா சுட்டு பிழைப்பு நடத்துபவர்கள், கையேந்தி பவன்கள் நடத்துபவர்கள் என எல்லா ஏழைகள் வியாபாரிகளின் மீது பாசமழை பொழிகின்றனர். அழைப்பிதழே இல்லாமல் பரிவாரங்களுடன் சென்று வாழ்த்து சொல்லும் சாக்கில் வாக்குகளை சேகரிக்கிறார்கள்.
ஒருவேளை கூட்டப்போறாய்ங்களோ? :
ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துடைப்பங்களுடன் ஏராளமானோர் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். திருமண வீட்டினரும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நல்லா பண்றாங்கயா பிரச்சாரம்:
திடீரென ஒருவர் துடைப்பத்துடன் மேடையை நோக்கி ஓடினார். அவர்தான் வேட்பாளர். பெயர் ரேவந்த் ராவ். மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு மைக்ரோ போனை எடுத்து பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். திருமண வீட்டினர் என்ன சொல்வதே என்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்க பிரசாரத்தை முடித்த பிறகுதான் வேட்பாளரும் பரிவாரங்களும் வெளியே சென்றனர்.
பாப்பா...எனக்கே ஓட்டு போடு:
அதேபோல் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பிறந்தநாள் விழா. இதை கேள்விப்பட்டதும் வேட்பாளர்கள் அங்கு வந்து வாக்கு சேகரித்தனர்.
போஸ் குடுத்தா போதும்ப்பா:
தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஜன்கான் தொகுதி வேட்பாளருமான "பொன்னல லஷ்மய்யா" கரீம்நகர் பகுதியில் சிறுவர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடப்பதை கேள்விப்பட்டதும் அங்கு விரைந்தார். சிறுவர்களிடம் இருந்து பேட்டை வாங்கி பந்தை அடிப்பது போல் நடித்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்தார். அதோடு போட்டியை விளம்பரம் செய்வதுபோல் கட்அவுட் வைத்து சிறுவர்களை குஷி படுத்தி விட்டார்.
சமோசா...சமோஓஓசா:
செகந்திராபாத் காங்கிரஸ் வேட்பாளரான அன்ஜன் குமார் யாதவ் சாலையோர ஓட்டலுக்குள் நுழைந்து சமைத்தார். ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாம கிருஷ்ண ரெட்டி சாலையோரத்தில் சமோசா விற்கும் கடைக்குள் நுழைந்து கடைக்காரர் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் சமோசாவை சுட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
இஸ்திரி போட்ட ஜெயசுதா:
செகந்திராபாத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயசுதா இஸ்திரி போடும் கடைக்கு சென்று துணிகளுக்கு அயர்னிங் போட்டு கொடுத்து விட்டு அதற்கு கூலியாக தனக்கு வாக்களிக்கும்படி கேட்டு கொண்டார்.
வாக்கிங் போக கூட விடறதில்ல:
சில வேட்பாளர்கள் காலையில் வாக்கிங் செல்லும் நேரத்தை கூட வீணாக்குவதில்லை. வாக்கிங் வரும் மக்களிடமும் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோரிடமும் ஓட்டு வேட்டையாடுகின்றனர்.