"பர்ஸ்ட்" ஹெல்மெட்... "நெக்ஸ்ட்" பைக்... ஆந்திர போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு
ஹைதராபாத்: ஹெல்மெட் வாங்கினால் மட்டுமே இரு சக்கர வாகனத்தை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் போலவே ஆந்திராவில் இரு சக்கர வாகனம் ஒட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலில் உள்ள போதும், பலர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமலேயே பயணம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதைத் தீவிரமாக்குவது குறித்து போக்குவரத்து துறை கமிஷனர் பாலசுப்பிரமணியம் 13 மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கடப்பா உள்பட சில மாவட்டங்களில் ஹெல்மெட் தட்டுப்பாடு நிலவுவதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தட்டுப்பாட்டை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
அதோடு, இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனங்கள் வண்டியுடன் கட்டாயம் ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஹெல்மெட் வாங்கினால் மட்டுமே இரு சக்கர வாகனத்தை பதிவு (ரிஜிஸ்ட்ரேஷன்) செய்ய வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் அவர் உத்தரவிட்டார். இதனை வரும் 7ம் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு போக்குவரத்து போலீசாருக்கும் பொருந்தும். எனவே, போக்குவரத்து போலீசாரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் அன்றைய தினம் ஆப்செண்ட் போடப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேபோல், ஹெல்மெட் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அவர் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகளையும் வழங்கினார்.