ஆம் ஆத்மியில் 'அக்கப்போர்'.. அஞ்சலி தமானியா விலகல்! கேஜ்ரிவால் மீது சரமாரி புகார்!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் சரித்திரம் படைத்து ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி உட்கட்சி மோதல்களால் உருக்குலைந்து போய் கொண்டிருக்கிறது. அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அஞ்சலி தமானியாவும் ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கட்சி கொள்கைகளின்படி அவர் நடக்கவில்லை எனவும் அந்தக் கட்சியின் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனை அடுத்து அவர்கள் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட உநிலையில் கேஜ்ரிவால் மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை பேரம் பேசி கட்சியில் இணைத்துக்கொள்ள ஆம்ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் முயற்சித்ததாகவும் அதற்கான ஆதாரமாக ஆடியோ பதிவையும் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கார்க் வெளியிட்டார்.
இவர் ஆம் ஆத்மியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவர் ஆவார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மியிலிருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மூத்த தலைவர் அஞ்சலி தமானியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறும்போது, ஆம் ஆத்மி கொள்கைகளுக்காவே அந்தக் கட்சியில் இணைந்தேன். அந்தக் கட்சியின் தலைவரின் செயல்களுக்கு துணைப் போக அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும் கேஜ்ரிவாலின் நடவடிக்கை முட்டாள்தனமான செயல்களாக இருக்கிறது. அதனால் நான் இந்தக் கட்சியிலிருந்து விலகுகிறேன். அர்விந்த் கேஜ்ரிவாலின் கொள்கைகளை நம்பியே கட்சியில் இணைந்தேன். அவரது குதிரை பேரத்தை ஆதரிக்க அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.