ஜெயலலிதாவுக்கு எதிராக அப்ப்பீல் செய்யக் கூடாது... கர்நாடகத்திலிருந்து மேலும் ஒரு ஆதரவுக் குரல்!
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அப்பீல் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் சி.எம்.இப்ராகிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தரப்பிலிருந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுந்துள்ள 3வது குரல் இது. ஏற்கனவே கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர் எம்.வி.ராஜசேகரன், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு எதிராக அப்பீல் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும் கர்நாடக அரசும் கூட அப்பீல் முடிவு குறித்து இதுவரை முறைப்படி ஆலோசனை கூட நடத்தாமல் உள்ளது. இந்த நிலையில் சி.எம்.இப்ராகிம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சி.எம்.இப்ராகிம் முன்பு தேவெ கெளடா கட்சியில் முக்கியப் பிரமுகராக, கெளடாவின் வலது கரம் போலத் திகழ்ந்தவர் ஆவார். கெளடா பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இவர் இருக்கிறார். மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் குறித்து ஜெயா பிளஸ் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்குக்கும் கர்நாடகத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இதில் கர்நாடக அரசு பார்ட்டி கிடையாது. எனவே அப்பீல் செய்யும் உரிமையும் கிடையாது. இந்த சூழ்நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ளார். கோடிக்கணக்கான மக்கள் அவர் பின்னால் உள்ளனர். அவர் ஏழை மக்களுக்காக பாடுபட்டு வருவதை நானே கண்கூடாக பார்த்துள்ளேன். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மக்களின் நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு அப்பீல் செய்யக்கூடாது. இரு மாநில மக்களும் கூடி வாழ வேண்டும். எனவே இதைக் கருத்தில் கொண்டு மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சித்தராமையாவை வலியுறுத்தியுள்ளேன் என்று இப்ராகிம் கூறினார்.












Click it and Unblock the Notifications