போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு.. சிலை தடுப்பு போலீசார் அதிரடி ரெய்டு
சென்னை: போயஸ் கார்டனில் சிலை கடத்தல் தொடர்பாக ஒரு வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரும் தொழிலதிபர்கள் சிக்கி வருகிறார்கள்.
சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள், டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் போயஸ் கார்டனில், கஸ்தூரி எஸ்டேட், மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
யாருடைய வீடு
அந்த வீடு யாருடையது என்ற தகவலை இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு 8 போலீஸ் கொண்ட குழுவால் சோதனை நடைபெற்று வருகிறது.
வீட்டுக்கு வெளியே
வீட்டுக்குள் ஒரு குழுவும் வீட்டுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் ஒரு குழுவும் சோதனை மேற்கொண்டு வருகிறது. தோட்டத்தில் சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் மண்வெட்டியைக் கொண்டு தோண்டி பார்த்து சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள்ளே ஏதேனும் ரகசிய அறைகள் உள்ளதா, அல்லது வேறு ஏதேனும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது,.
ரன்வீர் ஷா
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. தொழிலதிபர் ரன்வீர்ஷாவிற்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் தான் போயஸ் கார்டனில் சோதனை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லுக்அவுட் நோட்டீஸ்
ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் போயஸ் கார்டனில் நடைபெறும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினிகாந்த் வீடுகள் அமைந்துள்ளன. செல்வந்தர்கள் வசிக்கும் கூடிய பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.