சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்
1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி,உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. -யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர்.
தமிழ்நாடு ரகசிய காவலர் பிரிவில் அவர் பணியாற்றிய போது 1906ஆம் ஆண்டிலிருந்து2010ஆம் ஆண்டு வரை 104 ஆண்டுகள் தமிழக காவல் துறையில் புலனாய்வு செய்த முக்கிய வழக்குகள் பற்றிய விவரங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்ட அதிகாரிகள் குழுவில்,இவருடைய பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, இந்த பதவிக்கு சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.