திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு அக்டோபரில் பிரம்மோற்சவம் - ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி - திருமலை தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.
புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் குடி கொண்டுள்ள திருமலையில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, அக்டோபர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மோற்சவ நாட்களில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதால், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, இலவச உணவு மற்றும் இலவச சிகிச்சை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ காலத்தில் சாதாரண பக்தர்களும் ஏழு மலையானை எளிதாக தரிசிப்பதற்காக ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஆகியவையும் எவ்வித குறைபாடின்றி மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் அதிகாரி சாம்பசிவராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் முதியவர்கள், மாற்று திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய காம்பளக்ஸ் விரைவில் கட்டப்பட உள்ளன. 300 ரூபாய் ஆன்லைன் மூலம் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 57 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 32.4 சதவீதம் தரிசனம் செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்தவர்கள் 24.77 சதவீதமும், கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் 14.75 சதவீதமும் தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் மலேசியா, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து, அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 8 ஆயிரத்து 464 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக சாம்பசிவராவ் கூறியுள்ளார்.