சிக்கியது புதிய ஆதாரங்கள்.. போபர்ஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!
டெல்லி: போபர்ஸ் ஊழல் வழக்கில் 12 வருடங்களுக்கு பிறகு சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்லது சிபிஐ.
ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 1985ம் ஆண்டில் இந்திய ராணுவத்துக்கு 400 கோடி ரூபாய்க்கு பீரங்கிகள் வாங்குவதற்காக, இந்தியாவுக்கும் ஏ.பி.போபர்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக, இந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் சிலருக்கும், ராணுவ அதிகாரிகள் சிலருக்கும் போபர்ஸ் நிறுவனம் சார்பில், 64 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
அப்போதைய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங். இந்த ஊழலை வெளியே கொண்டு வந்தார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தியது.
சிபிஐ போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை. 2005ம் ஆண்டு மே 31ம் தேதி டெல்லி ஹைகோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. முக்கியக் குற்றவாளியான குட்ரோச்சி விடுவிக்கப்பட்டு, அவர், 2013ம் ஆண்டு இறந்து விட்டார்.
இந்த நிலையில், போபர்ஸ் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ இன்று அப்பீல் செய்துள்ளது. 12 வருடங்கள் கழித்து அப்பீல் செய்வது சரியாக இருக்காது என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரை செய்திருந்த நிலையிலும், சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. சிபிஐயிடம் சில வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.