நெருங்கும் குளிர்காலம்..மீண்டும் காஷ்மீரில் குவிக்கப்படும் ராணுவம்.. இம்முறை என்ன காரணம்? பரபர தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தற்போது குளிர் காலம் உச்சத்தில் உள்ள நிலையில், அங்கு திடீரென ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த சமயத்தில் காஷ்மீரில் இந்தியா பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
அப்போது தொடங்கிய போராட்டம் பல மாதங்கள் வரையிலும் நீட்டித்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
திமுகவுக்கு இதே வேலையா போச்சு..! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
காஷ்மீர் விவகாரம்
பல மாதங்களுக்குப் பின்னரே அங்கு நிலைமை மெல்லச் சீராகி வருகிறது. காஷ்மீரில் தேர்தலை நடத்துவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. இதற்காகக் காஷ்மீரில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்கள் உடனும் கூட பிரதமர் மோடி நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆலோசனை நடந்து சில மாதங்கள் வரை ஆகிவிட்டது. இருப்பினும், அதன் பிறகு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய அரசு
காஷ்மீரில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன் அங்கு அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் பலரும் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேநேரம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்குப் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகவே மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
மெல்ல இயல்பு நிலை
கடந்த சில மாதங்களாகத் தான் அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. அங்குள்ள ராணுவத்தினர் மெல்லத் திரும்பப் பெறப்பட்டு வந்தனர். இந்தச் சூழலில் தற்போது திடீரென மீண்டும் காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரின் பவர் டெவலப்மென்ட் டிபார்ட்மென்டை பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் காஷ்மீர் மின் துறை ஊழியர்கள் இதற்கு மிகவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
என்ன காரணம்
ஜம்மு-காஷ்மீர் பிடிடியை பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, அங்கு மின்சாரத்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. வட இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கடுமையான குளிர் நிலவி வரும் நிலையில், மின்துறை ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மின் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மின்துறை ஊழியர்கள் சரி செய்யவில்லை.
மின் சேவை பாதிப்பு
தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாகப் பல மாவட்டங்களில் மின் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பொதுச் சொத்துகளை தற்போதைய அரசு விற்க முயல்வதாகவும் இந்த முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராணுவம் வருகை
நிலைமை கையை மீறிப் போகலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் உதவிக்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் உதவியுடன் மின் சேவையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராணுவத்தினரின் வருக்கைக்குப் பின்னர் மாநிலத்தில் சில பகுதிகளில் மின் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் ராணுவம் அழைக்கப்பட்டுள்ள போதிலும், மறுபுறம் மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர்
இது தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், "ஜம்மு பிராந்தியத்தில் 15 முதல் 20 சதவீத ஃபீடர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேநேரம் காஷ்மீரில் பகுதியில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அனைத்தும் வழக்கம் போலத் தான் இயங்குகிறது" என்றார். மேலும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாகவும் இந்த விவகாரத்தில் விரைவில் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.