ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு மகாராஷ்டிரா நீதிமன்றம் ஒன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்எல்ஏக்கள் மற்றும் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சம்மன்
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற வழக்கு, மகாராஷ்டிரா மாநிலம், துர்ஹமபாத் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
பிடிவாரண்ட்
ஆனால், ஒருமுறைகூட சந்திரபாபு நாயுடு ஆஜராகவில்லை. இந்தநிலையில்தான், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரபரப்பு
இப்போது ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். முதல்வருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் மட்டுமின்றி, நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் சமம்
சட்டத்தின் முன்பு, முதல்வர் முதல் சாமானியர்கள் வரை சமம்தான் என்பதை உணர்த்தும் வகையில் நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.