வீடற்றவர்கள் இரவில் தங்க பழுதடைந்த பஸ்கள்: கெஜ்ரிவால் புதிய திட்டம்
டெல்லி: டெல்லியில் பழுதடைந்த பஸ்களை வீடு இல்லாதவர்கள் இரவில் பயன்படுத்த கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லியில் நதிக்கரையோரத்திலும் பல்வேறு இடங்களில் சாலையோரத்திலும் குடியிருந்து வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கப்படும் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கைவிடப்பட்ட பேருந்துகள்
டெல்லியில் பல இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் பஸ்கள் உள்ளன. அந்த பஸ்களை இரவு நேரத்தில் வீடு இல்லாத தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இரவு தங்கும் விடுதிகள்
அதன் முதல் கட்டமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே கைவிடப்பட்ட நிலையில் பழைய பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பஸ்சில் வீடு இல்லாதவர்கள் தற்காலிக வீடாக இரவு நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளாக மாற்றம்
இந்த பஸ்சுக்குள் ஏராளமானோர் இரவில் தங்கி இருந்தனர். பஸ்சுக்கு வெளியேயும் ஏராளமானோர் இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதுபோல் மற்ற இடங்களில் உள்ள கைவிடப்பட்ட பழைய பஸ்கள் இரவு நேர வீடுகளாக மாற்றப்பட்டு வருகிறது.
அரசு கட்டிடங்கள்
இதேபோல் டெல்லியில் கைவிடப்பட்ட நிலையில் 264 அரசு கட்டிடங்கள் உள்ளன. அவற்றையும் இரவு நேரத்தில் மட்டும் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு வசதியாக மாற்றப்படுகிறது.
பாதுகாப்பு வேண்டும்
இந்த திட்டத்தை வரவேற்ற டெல்லி வாசிகள் இரவில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.