அரவிந்த் கெஜ்ரிவால் : மாநில முதல்வரான 2-வது ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
டெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் ஐ.ஐ.டி மாணவர். இன்று டெல்லியின் முதல்வராக பதவியேற்றதன் மூலம் முதலமைச்சர் பதவி வகிக்கும் இரண்டாவது ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் என்ற பெருமையை கெஜ்ரிவால் பெற்றுள்ளார்.
கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கை பெற்ற கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 1989ம் ஆண்டு எந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இதேபோல், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் மும்பை ஐ.ஐ.டி.யில் உலோகவியல் பொறியியல் படித்தவர். இவர்களைத் தவிர மத்திய அமைச்சர்கள் அஜித் சிங், ஜெய்ராம் ரமேஷ் போன்ற உயர் தொழில்நுட்பம் படித்த அரசியல் தலைவர்களும் ஐஐடியின் முன்னாள் மாணவர்களே.
அஜித் சிங் கம்ப்யூட்டர் என்ஜினீயர், இவர் காரக்பூரில் பி.டெக் படித்தவர். ரமேஷ் மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்தவர். ஜெய்ராம் ரமேஷுடன் ஐ.ஐ.டி.யில் படித்த நந்தன் நீலகேனி தற்போது ஆதார் திட்ட தலைவராக உள்ளார்.
விரைவில் அவரும் அரசியலில் ஈடுபட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.