நாகாலாந்து ஆளுநர் அஸ்வனிகுமார் ராஜினாமா!
டெல்லி: நாகாலாந்து மாநில ஆளுநர் அஸ்வனிகுமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகும்படி வலியுறுத்தினார்.

இதனால் உத்தரபிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன் நாகாலாந்து ஆளுநர் அஸ்வனிகுமாரும் தமது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித், கர்நாடகா ஆளுநர் பரத்வாஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் பதவி விலக கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நாகாலாந்து ஆளுநர்அஸ்வினிகுமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போது நான் சிம்லா வந்துவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டேன். இப்போதுதான் நிம்மதியாக இருப்பதாக உணருகிறேன் என்றார்.
யார் இந்த அஸ்வனி குமார்?
சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் அஸ்வனி குமார். கடந்த 2013-ம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டார்.
சி.பி.ஐ. இயக்குனராக அஸ்வனி குமார் பதவி வகித்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications