சூப்பரப்பு.. நம்ம நாட்டு பணம் இல்லை.. பூடான் கரன்சியை வைத்துப் பிழைக்கும் அஸ்ஸாமியர்கள்!
அஸ்ஸாமில் எல்லைப் பகுதி மக்கள் இந்திய ரூபாய் பற்றாக்குறையாக உள்ளதால் பூட்டான் நாட்டு கரன்சியைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
குவஹாத்தி: இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள குழப்பம் எப்போது ஓயும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் பூட்டான் நாட்டு கரன்சியை அஸ்ஸாம் மாநில மக்கள் பயன்படுத்தி பொருட்களை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளந.
இந்தியாவில் இரண்டு முக்கிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் சாமானிய மக்கள் மிகப் பெரிய துயரத்திற்குள்ளாகியுள்ளனர். அரசு இதுகுறித்து ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் சிரமப்படுவதை அரசாலும் கூட மறுக்க முடியாது.
இந்த நிலையில் அஸ்ஸாமில் பூட்டான் நாட்டு கரன்சியை மக்கள் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதிய அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அஸ்ஸாம் மக்கள் பூட்டான் கரன்சியைப் பயன்படுத்துகிறார்களாம்.
கோக்ரஜார் மாவட்டம்
அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டம் பூட்டான் எல்லையில் உள்ளதாகும். இங்கு பொருட்களை வாங்க அங்குள்ள மக்கள் சர்வ சாதாரணமாக பூட்டான் கரன்சியைப் பயன்படுத்திக் கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பூட்டான் கரன்சி
பூட்டான் கரன்சியை இப்பகுதி மக்கள் பயன்படுத்துவது புதிதில்லையாம். இங்கு மிகவும் சர்வ சாதாரணமான முறையில் பூட்டான் கரன்சியும் புழக்கத்தில் உள்ளதாம். இருப்பினும் பெருமளவில் புழக்கத்தில் இதுவரை இருந்ததில்லை. ஆனால் தற்போது இந்திய ரூபாய்க்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் அதிக அளவில் பூட்டான் கரன்சி புழங்குகிறதாம்.
500 கொடுத்தால் 400 கிடைக்கும்
இந்தியாவின் பழைய 500 ரூபாயைக் கொடுத்தால் பதிலுக்கு ரூ. 400 மதிப்பிலான பூட்டான் கரன்சி கிடைக்குமாம். முன்பு நிலைமை தலைகீழாக இருந்ததாம். அதாவது நமது ரூபாயில் 400 கொடுத்தால், பூட்டானின் 500 ரூபாய் கிடைக்குமாம். இப்போது இந்திய ரூபாய்க்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் பூட்டானியர்கள் இதில் காசு பார்க்கிறார்களாம்.
அரசு கண்டு கொள்வதில்லை
எங்களது பகுதியில் அருகாமையில் வங்கிகளோ , ஏடிஎம்மோ இல்லை. எனவேதான் நாங்கள் பூட்டான் கரன்சியைப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு வேறு வழி இல்லை என்று எல்லைப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். அரசு எங்களைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவதில்லை. மொபைல் ஏடிஎம் மையங்களை அமைத்தால் நல்லது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்து இப்படியும் நடக்கலாம்
அடுத்து ஆண்டிப்பட்டியிலும், அரசம்பட்டியிலும், ஜப்பானிய யென், அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோவைக் கொடுத்து கத்திரிக்காய், கொத்தவரங்காய் வாங்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்!