சார்க் தலைவர்களுக்கான விருந்தில் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநில உணவு வகைகள்
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமை இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் சார்க் நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம், வங்கதேச அதிபர் சேக் ஹசீனாவின் பிரதிநிதியான சபாநாயகர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சூப்
விருந்தின் துவக்கமாக மெலன் சூப் பரிமாறப்பட்டது. இதையடுத்து சிக்கன் மற்றும் மட்டன் டிக்கா, தந்தூரி ஆலூ, அரபி கபாப் ஆகியவை பரிமாறப்பட்டன.
செட்டிநாடு சிக்கன்
விருந்தினர்களுக்கு இறால் சுக்கா, செட்டிநாடு சிக்கன், பிர்பாலி கோப்தா கரி(முகலாய்), ஜெய்பூரி வெண்டைக்காய் கூட்டு(ராஜஸ்தான்), தால் மக்னி(பஞ்சாப்), போட்டோல் தோர்மா(மேற்கு வங்கம்) மற்றும் குஜராத்தின் பிரதான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
மாநில கலவை
பிரணாப் அளித்த விருந்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாக உள்ள உணவு வகைகள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பான்
உணவை சாப்பிட்ட பிறகு விருந்தினருக்கு மாம்பழ ஷிர்கந்த், பழங்கள் மற்றும் இறுதியாக பான் வழங்கப்பட்டது.