சன் டிவிக்கு 'பாதுகாப்பு சான்றிதழ்' வழங்க உள்துறை மறுத்தது சரியல்ல: அட்டர்னி ஜெனரல்
டெல்லி: கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்தது சரியல்ல என்று அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார். இதனால் சன் டி.வி.யின் பங்குகள், பங்குச் சந்தையில் இன்று ஏறுமுகம் கண்டன.
சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களின் லைசென்ஸை புதுப்பிக்க மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்தது.
இது தொடர்பாக ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரத்தோகியிடம் இந்த பிரச்சனை சென்றது. அத்துடன் உள்துறை அமைச்சகத்துக்கு கலாநிதி மாறனும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து ஆராயந்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரத்தோகி, சன் டி.வி. குழும சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்தது சரியல்ல என்று தெரிவித்திருந்தார். இதனால் சன் குழும சேனல்களுக்கான லைசென்ஸ்கள் மீண்டும் கிடைக்க இருக்கிறது. அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்துகள் மத்திய அரசை கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் அட்டர்னி ஜெனரல் கருத்தால் பங்குச் சந்தைகளில் கடந்த இரு வாரங்களாக ஆட்டம் கண்டிருந்த சன் குழுமத்தின் பங்குகள் இன்று ஏறுமுகம் கண்டன,