பெங்களூர் வளர்ச்சிக்கு உதவுங்கள்: கட்காரியிடம் கர்நாடக அமைச்சர் கோரிக்கை
பெங்களூர்: வளர்ந்து வரும் பெங்களூர் நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து கர்நாடக உள்கட்டமைப்பு வளர்ச்சி அமைச்சர் ரோஷன்பெய்க் வலியுறுத்தினார்.
டெல்லியில் இன்று நிதின் கட்காரியை கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் சந்தித்து பேசினார். அப்போது டைம் பத்திரிகையில், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் 8 நகரங்களில் ஒன்றாக பெங்களூர் தேர்வாகியுள்ளதை சுட்டிக்காண்பித்த ரோஷன்பெய்க் பல மாநிலத்தவர்களும் வசிக்கும் பெங்களூரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றவும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம், தரைப்பாலங்கள் அமைக்க வேண்டும் என்றும் கட்கரியிடம், ரோஷன் பெய்க் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக அமைச்சரின் கோரிக்கையை பொறுமையாக கேட்டுக்கொண்ட நிதின்கட்கரி, பெங்களூர் வளர்ச்சிக்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகள், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.