போதையில் பெங்களூர்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 5 மணி நேரத்தில் 845 பேர் மீது வழக்கு
பெங்களூர்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பெங்களூரில் ஐந்தே மணி நேரத்தில், 845 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர், அதில் ஒருவர் பெண்.
பெங்களூரில் வார இறுதி நாட்களில் நள்ளிரவு 1 மணிவரை மது பார்களை திறந்து வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் இரவு 11 மணிக்கெல்லாம் இவை மூடப்பட வேண்டும்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை தொடர்ந்து 5 மணி நேரம் பெங்களூரின் 104 பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை அவர்கள் கண்காணித்தனர். ஐந்து மணி நேரத்திலேயே மது குடித்து வாகனம் ஓட்டிய 845 பேர் சிக்கினர். இதில் ஒரு பெண்மணியும் அடங்குவார். இதற்காக 911 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
மது குடித்து பிடிபட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டுநர் லைசென்சும் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். பெங்களூரில் நோக்குமிடமெல்லாம் மது பார்கள் இருப்பதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.