பெங்களூரில் சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி ஊழியர் கைது: பள்ளியை திறப்பதில் திடீர் குழப்பம்
பெங்களூர்: 3 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளியின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து பள்ளி வழக்கம்போல இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
பெங்களூர் பள்ளியில் படிக்கும் 3 வயது மாணவி பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, மோசடியாக பள்ளி நடத்திய குற்றத்திற்காக பள்ளி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ளது ஆர்க்கிட் இன்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளிக்கு பெங்களூரில் மட்டும் ஆறு கிளைகள் உள்ளன. இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.
ஜாலஹள்ளியிலுள்ள பள்ளியில் நர்சரி படித்து வந்த 3 வயது மாணவி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்துள்ளார். மேலும் அவருக்கு காய்ச்சலும் அடித்துள்ளது. இதையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சிறுமியிடம் கேட்டதற்கு பள்ளியில் ஒரு அங்கிள் தான் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஜாலஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, புதன்கிழமை முதல் பள்ளி மூடப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், அலுவலக உதவியாளர் குண்டப்பா (45) என்பவர்தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து குண்டப்பா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:
புகைப்படங்களை கொண்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 164ன்கீழ், சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்துள்ளார். சிறுமியிடமிருந்து போலீசார் அதிக தகவல்களை பெற முடியவில்லை. ஏனெனில் அவர் இன்னும் சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மிகவும் கவனமாக கையாள வேண்டிய வழக்கு என்தால் இதுகுறித்து கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது. இவ்வாறு ரெட்டி தெரிவித்தார்.
இதனிடையே குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளி வழக்கம்போல இன்று காலை முதல் செயல்பட தொடங்கியது. அதே நேரம், 5ம் வகுப்பு வரையில் மட்டுமே பாடம் நடத்த அந்த பள்ளி அனுமதி பெற்றுள்ளதால், பிரிகேஜி வகுப்புகளும், நர்சரியும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளும் செயல்படவில்லை. இதனால், அந்த வகுப்பில் பயிலும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்க மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. நர்சரி, பிரிகேஜி, 6 மற்றும் ஏழாம் வகுப்புகளை நடத்த அனுமதி பெறவில்லை.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரை கன்னட வழியில் மட்டுமே கல்வி கற்றுக்கொடுக்க அந்த பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆங்கில மீடியத்தில் கல்வி கற்றுக்கொடுப்பதாக தெரிகிறது. எனவேதான் பள்ளி செயலாளர் கே.ஆர்.கே ரெட்டி கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தற்போதுள்ள சட்டப்படி, ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கும் நர்சரிக்கும் அனுமதி கிடைக்காது என்று தெரிகிறது. எனவே இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.