பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஜாமீன்
டெல்லி: பெங்களூர், தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசிர் மதானிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பெங்களூரில் அடுத்தடுத்து பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசிர் மதானி, கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நீரிழிவு இருக்கிறது, கண்பார்வை குறைபாடு உள்ளது என்பதால், சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அப்துல் நாசிர் மதானி உச்சநீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் செலமேஸ்வர், சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்திவந்தது.
விசாரணையின்போது, மதானிக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதிகளை சிறைக்குள்ளேயே ஏற்பாடு செய்து தருகிறோம். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கர்நாடக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், மதானிக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், மதானி நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது என்று வாதிட்டார். இதையடுத்து, மதானிக்கு, ஒரு மாதகாலம், ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் பெங்களூரைவிட்டு மதானி வேறு ஊருக்கு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சாட்சியங்களை, மதானி தொடர்பு கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதானி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கர்நாடக அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.