10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் ருத்ரதாண்டவம் ஆடிய வெயில்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திங்கட்கிழமை வெயில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியாக இருந்தது.
பூங்கா நகரமான பெங்களூரில் இன்று திரும்பும் பக்கம் எல்லாம் கட்டிடங்கள் தான் உள்ளன. ஓங்கி, உயர்ந்து வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டி வெட்டி கட்டிங்களை கட்டி வருகிறார்கள்.
இதனால் பெங்களூரில் நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
வெயில்
ஒரு காலத்தில் பெங்களூரில் திரும்பும் பக்கம் எல்லாம் மரங்கள், செடி கொடிகளாக இருந்தது. அதனால் அந்த நகரும் எப்பொழுதும் குளு குளுவென்று இருந்தது. இந்த காரணத்தினாலேயே பலர் பணி ஓய்வுக்கு பிறகு பெங்களூரில் செட்டில் ஆகினர்.
ஐடி
பெங்களூருக்கு ஐடி கம்பெனிகள் படையெடுக்க ஆரம்பித்த பிறகு நகரில் உள்ள கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது. அதில் இருந்து இன்று வரை புதிய கட்டிடங்களை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள், கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
வெப்பம்
மரம், செடி கொடிகளை அழித்து கட்டிடங்கள் கட்டுவதால் பெங்களூரில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெங்களூர் குளு குளு என்று இருந்த காலம் மலையேறி கோடை காலத்தில் சென்னைக்கு போட்டியாக சூடாக உள்ளது.
வெயில்
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் திங்கட்கிழமை வெயில் சுட்டெரித்துள்ளது. நேற்று பெங்களூரில் வெயில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியசாக இருந்தது. முன்னதாக 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி பெங்களூரில் வெயில் அதிகபட்சமாக 35.9 டிகிரி செல்சியசாக இருந்தது.
கோடை
பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பெங்களூரில் வெயில் ருத்ர தாண்டவம் ஆண்டும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.