பெங்களூர் மாநகராட்சியில் 'எலி ஊழல்'!: 20 எலிகளைப் பிடிக்க ரூ.2 லட்சம் செலவு!!!
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியில் கடந்தாண்டு 20 எலிகளைப் பிடிப்பதற்காக ரூ 2 லட்சம் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிளை அலுவலகக் கட்டிடம் ஒன்று உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒருங்கிணைந்த புதிய அலுவலகம் சாந்தி நகரில் கட்டப்பட்டுள்ளதால், இந்த கட்டிடம் கடந்த 2 ஆண்டு களாக காலியாக இருக்கிறது. எனவே, இங்கு எலித் தொல்லை அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டிடமானது மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் போலியோ, தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு வைக்கப்படும் மருந்துகளை அவ்வப்போது எலிகள் கடித்து சேதப்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்காக வரும் குழந்தைகளைக் கூட எலிகள் கடித்த சம்பவங்களும் நடந்துள்ளன
எனவே, கடந்தாண்டு அங்கு எலிகளைப் பிடிப்பதற்கென டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு, மூன்று நிறுவனங்களிடமிருந்து டெண்டர் பெறப்பட்டுள்ளது. எலிகளைப் பிடிப்பதற்காக தேர்வான நிறுவனத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கியுள்ளது பெங்களூர் மாநகராட்சி.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்...
இந்நிலையில், எலிகளை பிடிப்பதாகக் கூறி பெங்களூர் மாநகராட்சியில் ஊழல் நடந்ததாக எடியூர் கவுன்சிலரான ரமேஷ் என்பவருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூர் மாநகராட்சி எலி பிடிக்க செய்த செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார் ரமேஷ்.
பதில் கடிதம்...
அது தொடர்பாக புதன்கிழமை அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றில், 20 எலிகளைப் பிடித்ததற்கு ரூ 2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதாவது, ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.
எலி பிடிப்பதில் ஊழல்...
இதன் மூலம், எலி பிடிப்பதில் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ரமேஷ். மேலும், இது தொடர்பாக ‘தி இந்து' பத்திரிக்கைக்கு ரமேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலி பிடித்ததில் ஊழல் நடந்ததாக சில அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரினேன்.
ஒரு எலிக்கு ரூ 10,000...
அதில், 2013-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மல்லேஸ்வரத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய கிளை அலுவலகத்தில் 20 எலிகளைப் பிடிப்பதற்கு ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எலியைப் பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.
இதிலும் ஊழல்....
இதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் பெங்களூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் எலிகளைப் பிடிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என பார்த்தால், ரூ.20 லட்சம் செலவானதாக தெரிய வந்தது. 1 பெருச்சாளியை பிடிக்க ரூ. 10 ஆயிரமும், சிறிய ரக எலியை பிடிக்க ரூ. 5 ஆயிரமும் செலவிட்டதாக மாநகராட்சி கணக்குக் காட்டியுள்ளது. இதில் ஊழல் நடந்திருக்கிறது.
உட்புறம் புதுப்பிக்க...
அதே போல பெங்களூர் மாநகராட்சி கட்டிடத்தின் உட்புறத்தைப் புதுப்பிப்பதற்கு மட்டும் ரூ. 1.4 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்துள்ளது.
அரசு நடவடிக்கை வேண்டும்...
பெங்களூர் மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.