சீனிவாசனை ஐசிசி சேர்மனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சைகளுக்கு நடுவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக சீனிவாசனை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக சீனிவாசன், கடந்த 2011 முதல் பதவி வகித்துவந்தார். இந்தியன், பிரிமியர் லீக் கிரிக்கெட் சூதாட்டத்தில், சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒதுங்கினார்.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே இம்மாதம் 29ம்தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய சேர்மனாக சீனிவாசன் பொறுப்பேற்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம், சீனிவாசன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் பொறுப்பேற்க தயாராகினார். இதற்கு எதிராக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐபிஎல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு கடந்த திங்கள்கிழமை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், கோடை விடுமுறை முடிந்து நீதிமன்ற வழக்கமான அலுவல்கள் துவங்கிய பிறகு விசாரணை நடத்திக்கொள்ளாலம் என்று கூறிவிட்டது. இதனால் சீனிவாசன் ஐசிசி சேர்மனாக பதவியேற்பதில் இருந்த தடை விலகியது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் மீண்டும் ஒருமுறை சீனிவாசன் பெயரை ஐசிசிக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.
பெயர் தெரிவிக்க விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பிப்ரவரி மாதமே ஐசிசி சேர்மனாக சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டாலும்கூட, விதிமுறைகளின்படி மீண்டும் ஒருமுறை சேர்மன் பெயரை சம்மந்தப்பட்ட நாட்டின் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு அனுப்ப வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்துள்ளோம்" என்றார்.
மெல்பர்னில் ஐசிசியின் வருடாந்திர மாநாடு வரும் 23ம்தேதி தொடங்குகிறது. ஆறுநாள் கூட்டத்துக்கு பிறகு 29ம்தேதி சீனிவாசன் ஐசிசியின் முதலாவது சேர்மனாக மகுடம் சூட்டிக்கொள்ள உள்ளார். இதுவரை ஐசிசியில் தலைவர் பதவி மட்டுமே இருந்த நிலையில் சேர்மன் பதவி புதிதாக இப்போதுதான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.