ஜல்லிக்கட்டு, கம்பாலா போட்டிகளுக்கு ஆதரவு.. பெங்களூரில் ஆர்ப்பாட்டம்
பெங்களூர்: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல பெங்களூர்வாழ் தமிழர்களும் இந்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நகரின், ஆஸ்டின் டவுனில் உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு பெங்களூர் தமிழர் பேஸ்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

பிரபாகர் கூறுகையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு விதித்து உள்ள தடையை நீக்கவேண்டும். இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதன் மூலம் தமிழர்களின் வாழ்வியலை கொச்சைப்படுத்தும் முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் எருமை மாட்டை ஓடவிட்டு நடைபெறும் கம்பாலா விளையாட்டையும் அனுமதிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பை பொங்கலுக்கு முன்பு வழங்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறி விட்டனர். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications