பெங்களூரு வன்முறை... ரிசர்வ் செய்தவர்களுக்கு 72 மணி நேரத்திற்குள் இலவச பயணம்- ஏர் ஏசியா சலுகை
பெங்களூரு:பெங்களூரிலிருந்து செப்டம்பர் 13ஆம் தேதி பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் இலவசமாக தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் போராட்டங்களால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று, செப்டம்பர் 13ஆம் தேதி பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின் வசதிக்காக அந்நிறுவனம் இலவசப் பயணச்சலுகையை அறிவித்திருக்கிறது. இன்று, தாங்கள் பதிவு செய்த விமானத்தில் பயணிக்க முடியாதவர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் பயணத்தை வேறு எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ், விஸ்தாரா நிறுவனமும் விமான டிக்கெட்களை ரத்து செய்தால் அதற்கான கட்டணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
பக்ரித் பண்டிகை, ஓணம் பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில்கள், விமானத்தில் முன்பதிவு செய்தவர்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து வசதி இல்லாமல் குறித்த நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரமுடியாமல் போகும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.