அசைவ உணவும், செல்போனும் பலாத்காரங்களுக்கு காரணமாம்: சொல்கிறார் பீகார் அமைச்சர்
பாட்னா: அசைவ உணவு சாப்பிடுவதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் தான் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக பீகார் அமைச்சர் வினய் பீகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு காரணம் மினி ஸ்கர்ட் தான் என சில அரசியல் தலைவர்களும், செல்போன் தான் என்று சிலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநில கலை, கலாச்சார மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வினய் பீகாரி பலாத்காரங்கள் நடப்பதற்கு புதிய காரணத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாக முன்னணி நாளிதழில் தெரிவித்திருப்பதாவது,
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் செய்வார்கள். செல்போன்களாலும் பாலியல் பலாத்காரங்கள் ஏற்படுகிறது. வாலிபர்கள் ஆபாச படம் பார்க்க செல்போன்களை பயன்படுத்துகிறார்களே தவிர கல்விக்காக பயன்டுத்துவது இல்லை. செல்போன்களில் ஆபாச படம் பார்ப்பது அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சுத்த சைவப் பிரியரான வினய் மேற்கு சம்பரானில் உள்ள லாரியா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஆவார். மேலும் அவர் போஜ்புரி பாடகர். அவர்கள் சுமார் 300 பாடல்கள் பாடியுள்ளார், 1000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
அண்மையில் அவர் தயாரித்து இயக்கிய போஜ்புரி படத்தில் 11 பீகார் எம்.எல்.ஏ.க்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.