நம் நாட்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலாம்: பீகார் ஆசிரியையின் அறிவை பார்த்தீர்களா?
பாட்னா: பீகாரில் பள்ளி ஆசிரியை ஒருவர் நம் நாட்டின் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் என்று தவறாக தெரிவித்துள்ளார்.
பீகார் மாநலம் கயா மாவட்டம் பங்கேபஜார் பிளாக்கில் உள்ள தும்ரி கிராமத்தில் இருக்கும் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் குமாரி அனிதா. அவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்கு மாறுதல் வேண்டும் என்று கோரி மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் அகர்வாலிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் அனிதாவின் பொது அறிவை சோதிக்க சில கேள்விகள் கேட்டார். அப்போது அனிதா நம் நாட்டின் ஜனாதிபதி பிரதீப் பாட்டீல் என்றும், பீகார் மாநில ஆளுநர் ஸ்மிருதி இரானி என்றும் தவறாக பதில் அளித்துள்ளார். ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிதாவின் பதில்களை கேட்ட மாஜிஸ்திரேட் அதிர்ச்சி அடைந்து உண்மையிலேயே அவர் படித்து தான் ஆசிரியை ஆனாரா என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லித் தருவதை தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று வீடியோ எடுத்து வெளியிட்டது. அதில் அந்த ஆசிரியை மாணவர்களிடம் ஆண்டில் 360 நாட்கள் இருப்பதாகவும், பீகார் மாநில தலைநகரான பாட்னா தான் இந்தியாவின் தலைநகர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரியை ஜுனுவரி என்றும், ஆப்பிளை ஆபிள் என்றும், சாட்டர்டேவை ஷாத்ர்தே என்றும், எஜுகேஷனை அடுகேசன் என்றும் கற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.