குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11 குற்றவாளிகளும் விடுதலை
காந்திநகர்: கோத்ரா கலவரம் சமயத்தில் பின் நடந்த கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டு உள்ளது. உண்மையில் இதைவிட உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
வீட்டில் வைத்திருந்த தேசியக்கொடியை அகற்ற போகிறீர்களா? அதற்கு ரூல்ஸ் இருக்குது பாஸ்!
கூட்டு பலாத்காரம்
இந்த மோசமான கலவரத்தில் இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் நெஞ்சை உலுக்கும் வகையில் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறின. அப்படித்தான் கடந்த 2002இல் மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது. அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அவர்களின் குடும்பத்தினையும் அடித்தே கொன்றது.
ஆயுள் தண்டனை
இது மட்டுமின்றி பில்கிஸின் இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொலை செய்தனர். இதில் பில்கிஸ் பானு உடன் டிரக்கில் பயணித்த 14 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த 2004ஆம் ஆண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008இல் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
உச்ச நீதிமன்றம்
ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அதிலும் அவர்கள் அவர்களுக்கான தண்டனை உறுதியானது. விசாரணைக் காலத்தையும் சேர்த்து 15 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
விடுதலை
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக முடிவெடுக்க பஞ்சமஹால் கலெக்டர் சுஜல் மயாத்ரா தலைமையில் குஜராத் அரசு குழு அமைத்து. இந்த குழு 11 குற்றவாளிகளையும் விடுவிக்கலாம் என்று குஜராத் அரசுக்குப் பரிந்துரை அளித்தது. அதன்படி அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கேள்வி
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விடக் குறைவான கொடூர குற்றத்தைச் செய்த ஏராளமான குற்றவாளிகள் எந்தவித நிவாரணமும் இன்றி தொடர்ந்து சிறைகளில் இருக்கும் நிலையில், இவர்கள் எதன் அடிப்படையில் ரிலீஸ் செய்யப்பட்டார்கள் என மனித உரிமை வழக்கறிஞர் ஷம்ஷாத் பதான் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இதுபோன்ற முடிவுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.