குடிநீரில் விஷம் கலந்து இந்திய மக்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்! உளவுத்துறை உஷார்
டெல்லி: குடிநீரில் விஷம் கலந்து கூட்டமாக கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அணு ஆயுத தாக்குதலைவிட, இந்த பயோலாஜிகல் தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானிலுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் தீவிரவாத எண்ணம் கொண்ட அதிகாரிகளிடமிருந்து, வளைகுடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அணுகுண்டு மூலப்பொருட்களை பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், புதிய அச்சுறுத்தலாக பயோலாஜிக்கல் தீவிரவாதம் என்ற ஒரு வார்த்தை உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் உலவுகிறது. இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியதாவது: பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் தேக்கங்களில் பயோலாஜிக்கல் விஷத்தை கலந்து பொதுமக்களை கூட்டம் கூட்டமாக கொல்வது இதன் திட்டமாகும்.
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை முழுமையாக ஆட்சி செய்வதே இந்த தீவிரவாதிகளின் நோக்கமாகும். இந்த விஷப்பொருட்கள் காஷ்மீர், அசாம், பஞ்சாப் மாநிலங்கள் வழியாக கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதிகளில் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் இதுபோன்ற சம்பவங்களை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஆனால், கெமிக்கலின் அளவு குறைவாக கலக்கப்பட்டிருந்ததால் யாரும் உயிரிழக்கவில்லை. இதை ஒரு சோதனை முயற்சியாக தீவிரவாதிகள் செய்திருந்தனர். ஆனால், உயிர்கொலை செய்யும் அளவுக்கு அதிக கெமிக்கலை கலக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.