தெலுங்கு தேசத்துடன் கூட்டணி - அறிவித்தது பாஜக
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் மற்றும் ஆந்திர மாநில பாஜகவுக்குள் நிலவி வரும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. அதை பாஜக இன்று முறைப்படி அறிவித்தது.
ஆந்திர சட்டசபைக்கு நடக்கும் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம் கட்சியின் தலைவர் நரேந்திர குஜ்ரால் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாகியுள்ளது தெலுங்கு தேசம்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவதற்கான முயற்சிகளில் இனி சந்திரபாபு நாயுடுவும் இடம் பெறுவார், முதன்மைப் பங்கு வகிப்பார் என்றார்.
சந்திரபாபு நாயுடு கூறுகையில், நிச்சயம் மோடி தலைமையிலான அரசுக்கு ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவு கிடைக்கும். இந்தக் கூட்டணியால் சீமாந்திராவில் தெலுங்குதேசம்- பாஜகவுக்கு அதிக அளவிலான இடங்கள் கிடைக்கும்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆந்திராவில் 5 லோக்சபா தொகுதிகளிலும், 15 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். தெலுங்கானாவில் 8 லோக்சபா தொகுதிகளிலும், 47 சட்டசபைத் தொகுதிகளிலும் அது போட்டியிடும் என்றார் நாயுடு.
ஏற்கனவே சில கருத்துக் கணிப்புகளில் சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. அக்கட்சிக்கு மொத்தம் உள்ள 25 எம்.பி தொகுதிகளில் 15 கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.