குஜராத் தேர்தலுக்கு தயாராகும் பாஜக - தாமரை சின்னத்துடன் காவி நிற தொப்பியுடன் களமிறங்கும் தொண்டர்கள்
காவி நிறத்தில் உள்ள தொப்பியின் மீது மெல்லிய எம்பிராய்டரி போடப்பட்டு அதில் பஜாப் என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொப்பியின் மையத்தில் பாஜகவின் சின்னமாக தாமரை பொருத்தப் பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற வெற்றிப்பேரணியின் போது பிரதமர் மோடியும், பாஜக தொண்டர்களும் அணிந்திருந்த காவி தொப்பி அனைவரையும் கவர்ந்துள்ளது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே நாலு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது பாஜக.
உத்தரப் பிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியானது. இதில் உபி, உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அங்கு அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் குஜராத் பாஜக தலைமை அலுவலகம் வரை அவர் பேரணியாக சென்றார்.

மோடிக்கு வரவேற்பு
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார் மோடி. அப்போது சாலைகளில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியின் போது பிரதமர் மோடி, புதிதாக வடிவமைக்கப்பட்ட காவி வண்ண தொப்பியை அணிந்திருந்தார். குஜராத்தில் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அம்மாநில பாஜக நிர்வாகிகளும் இந்த தொப்பியை அணிந்திருந்தனர்.இது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

சிவப்பு தொப்பி போல காவி தொப்பி
உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் அதன் தலைவர் அகிலேஷ் உள்பட தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சிவப்பு நிற தொப்பியை அணிந்து வந்தனர். தற்போது குஜராத் மாநில பாஜக தலைமை காவி நிற தொப்பியை தயாரித்து நிர்வாகிகள் தொண்டர்களுக்கு வழங்கி வருகிறது.

காவி தொப்பியில் தாமரை
குஜராத் பாஜக இந்த தொப்பியை தயாரித்துள்ளது. காவி நிறத்தில் உள்ள தொப்பியின் மீது மெல்லிய எம்பிராய்டரி போடப்பட்டு அதில் பஜாப் (குஜராத்தி) என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொப்பியின் மையத்தில் பாஜகவின் சின்னமாக தாமரை பொருத்தப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதுபோன்ற 30,000 தொப்பிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம், மேலும் தேவை அதிகரிக்கும் போது, நாங்கள் ஆர்டர் செய்வோம், என்று குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபைத் தேர்தல்
அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் நடைபெற்ற மகா-பஞ்சாயத்துச் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் அவர் உரையாடினார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று இருந்தது. சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே நாலு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது பாஜக.












Click it and Unblock the Notifications