குஜராத்தில் பாஜகவின் அரசியல் “கிரிக்கெட்”.. காங்கிரஸ்காரர்களுக்கு “டிக்கெட்” - சீனியர்கள் “விக்கெட்”
காந்திநகர்: டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து வந்த ஹர்தீக் பட்டேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பலருக்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, சீனியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் வரும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளர் பட்டியல்
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் 160 வேட்பாளர்களை கொண்ட முதல் கட்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது பாஜக.

முதலமைச்சர்
இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் கட்லோதியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி மஜுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

மூத்த அமைச்சர்கள்
அதேபோல் மாநில அமைச்சர்கள் ருஷிகேஷ் படேல், ஜிது வகானி, ஹர்ஷ் சங்வி, ஜகதீஷ் விஸ்வகர்மா, கானு தேசாய், கிரித்சிங் ராணா மற்றும் பூர்ணேஷ் மோடி ஆகியோர் தாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வென்ற தொகுதிகளிலேயே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.

புது முகங்கள்
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தெரிவிக்கையில், "தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் குஜராத் மாநில தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 38 எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்." என்றார்.

ஹர்திக் பட்டேல்
குறிப்பாக இந்த வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய பலருக்கு அக்கட்சி வாய்ப்பு அளித்து உள்ளது. குஜராத்தில் காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு விராம்கம் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸிலிருந்து தாவியவர்களுக்கு வாய்ப்பு
பாஜகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 69 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவில் இணைந்தவர்களாவார்கள். குறிப்பாக நேற்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சி எம்.எல்.ஏ பாகாபாய் பரத் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பாகாபாய் பரத்
பாகாபாய் பரத், கிர் சோம்நாத் மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார். ஆஷிர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கடந்த 2017 தேர்தலில் 31,000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வென்றார். சௌராஷ்டிரா மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஆஷிர் சமுதாயத்தின் மூத்த தலைவரான இவருக்கு வெற்றி உறுதி என்றே கூறப்படுகிறது.

மோகன்சின்
அதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின சமுதாயத்தை சோட்டா உடெபூர் சட்டமன்ற உறுப்பினர் மோகன்சின்ஹ் ரதாவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது 2 மகன்களுடன் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் அவரது மகன் ராஜேந்திரசின்ஹ் சோட்டோதேப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

சீனியர்கள் அப்செட்
இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு விழ வேண்டிய வாக்குகளை தங்கள் வசம் கொண்டு வரலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால், வாய்ப்பு கிடைக்காத பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளடி வேலையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அகமதாபாத் நகரில் உள்ள 11 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ராஜ்கோட் நகரில் உள்ள 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சித் தலைவர் சீட் ஒதுக்காதது கட்சிக்கு உள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications