“சர்பிரைஸ்”.. பிராமணரை ராஜஸ்தான் தலைவராக்கிய பாஜக! தேர்தலுக்கு இன்னும் 8 மாசம்தான் - பிளான் இதானா?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தின் புதிய தலைவராக சந்திர பிரகாஷ் ஜோஷியை நியமித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக சதீஷ் பூனியா பதவி வகித்து வந்த நிலையில், சிட்டூர்கர் மக்களவைத் தொகுதி பாஜக எம்பியான சந்திர பிரகாஷ் ஜோஷி மாநிலத்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தீவிர ஆர்.எஸ்.எஸ். பற்றாளரான இவர் அந்த அமைப்பின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து அவர் தற்போது பாஜக மாநிலத் தலைவராகி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் சிட்டூர்கர் கல்லூரியின் தலைவராக இருந்து இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்
பதேசர் பஞ்சாயத்து சமிதி, ராஜஸ்தான் பாரதிய யுவ மோர்சா உள்ளிட்ட துணை அமைப்புகளிலும் பல்வேறு பதவிகளை அவர் வகித்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றபெற்றபோது சிட்டூர்கர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர் சந்திர பிரகாஷ் ஜோஷி. அந்த ஆண்டு 3.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார் சந்திர பிரகாஷ் ஜோஷி.
தேர்தலில் பெரும் வெற்றி
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் 5.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டி கடந்த முறைவிட தற்போது தனது பலம் அதிகரித்து இருப்பதை உறுதிபடுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜக மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், அம்மாநிலத்தின் முக்கிய பிராமண தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
பிராமண முதலமைச்சர்கள்
ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் முதலமைச்சராகளாக இருந்து உள்ளனர். அதாவது பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களே அங்கு அதிகளவில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் பூனியா ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவராவார்.
ஜாட் சமுதாயம்
ராஜஸ்தானில் பிராமணர்களை விட அதிகமான அளவில் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்தாலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இதுவரை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகவில்லை. பாஜகவில் பிராமணர்களின் முகமாக அறியப்பட்ட 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கான்ஷியாம் திவாரி, முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே உடனான மோதல் காரணமாக கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
குறைந்த வயது
2018 தேர்தலில் அவரது கட்சியை தோல்வியடைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பின்னர் பாஜகவுக்கே திரும்பி மாநிலங்களை உறுப்பினர் ஆனார். தற்போது மாநில பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜோஷிக்கு 47 வயதுதான் ஆகிறது. ராஜஸ்தானை சேர்ந்த மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்னவும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்தான்.
மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்
அவரும் அம்மாநில பிராமண முகமாக பாஜகவில் இருந்த நிலையில், ஜோஷிக்கு தலைவர் பதவி அளித்துள்ளது பாஜக. அஷ்விணி வைஷ்ணவ் மத்திய அரசு அதிகாரியாக பல ஆண்டுகள் பதவி வகித்து அதன் பின்னர் மத்திய அமைச்சர் ஆனவர். ஆனால், ஜோஷி இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றியதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிராமண மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் வெளிப்படையாக ஜாதி பெருமைகளை பேசி இருக்கிறார் ஜோஷி.
மேவார் மண்டல வாக்குகள்
எனவே பிராமண சமுதாயத்தினரின் பெருவாரியான வாக்குகள் பாஜகவுக்கு ஜோஷியால் கிடைக்கும் என்று அக்கட்சித் தலைமை நம்புகிறது. சாதி அடிப்படையிலான வாக்குகள் மட்டுமின்றி அவர் சார்ந்த ராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் மண்டலத்திலும் அவருக்கு பெரும் செல்வாக்கு இருப்பதால் தேர்தலில் பயனளிக்கும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாகும்.